July 31, 2008

ஆற்றங்கரை





ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு! கண்ணுக்கு மை அழகு பாடலில் வைரமுத்துவின் வரிகள். மாலை மயங்கும் நேரத்தில் ஆற்றுப் பாலத்தில் நின்று வெட்டிக் கதை பேசுவது மிகவும் இனிமையான அனுபவம். மாலைச் சூரியனின் கதிர்கள் ஆற்று நீரில் மஞ்சளில் ஆரம்பித்து ஊதா வரை வித விதமான வண்ணங்களை தீட்டி மெதுவாக அன்றைய இரவுக்குத் தயாராகும். அந்த அந்தி சாயும் வேளயில் வைக்கோலோ சோளமோ ஏற்றிக்கொண்டு வீடு திரும்பும் மாட்டுவண்டிகள் பாலத்தைக் கடக்கையில் விட்டுச் செல்லும் அந்தப் பச்சை வாசனையை நுகர்ந்து கொண்டு இருக்கும் நேரத்திலயே தூரத்து வால்பாறை மலைகளில் இருள் போர்வை போர்த்தி மலைப் பாதையில் வண்டிகள் சிறு தீப்பெட்டிகளாக இரு வெளிச்சப் புள்ளிகளுடன் செல்லும் காட்சி நம்மைக் கட்டிப் போட்டு விடும். மெதுவாக எப்பொழுது ஆரம்பதிதது என்றே தெரியாமல் கேட்கும் விட்டில் பூச்சிகளின் ரீங்காரமும், ஆற்றங்கரையில் இருக்கும் ஓங்கி உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இருக்கும் பறவைகளின் வீடு திரும்பிய மகிழ்ச்சிக் கூக்குரல்களும், துணிகளைத் துவைத்து முடித்து வீடு திரும்பும் பெண்களின் பேச்சு சத்தமும் நம்மைத் தட்டி எழுப்பும். பாலத்தின் மெல்லிய தென்றல் வருட மறுகரையை அடையும் பொழுது நம்மை வரவேற்பது கப்பக்கிழங்கு, வேர்க்கடலை முதல் கருவாடு வரை விற்கும் தள்ளுவண்டிகளின் அணிவகுப்பு. அன்றைய தேர்வினை ஒரு கை பார்த்து விட்டு வயிறும் மனமும் நிறைந்த திருப்த்தியில் வீடு நோக்கி மெதுவாக நடையைக் கட்டலாம். சொல்ல வந்த விஷயத்தையே மறந்துவிட்டேன். ஆற்றங்கரையை மையமாக வைத்து நம்ம ராஜா பல பாடல்களைத் தந்து இருக்கிறார். அதில் ஒரு முத்து இதோ. எந்தப் பாடல் என்று கண்டுபிடியுங்கள். சிறு சிறு இடைவெளி விட்டு பாடலின் மூன்று பின்னணி இசைத்துளிகள் ஒரே கோப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவில் காணும் இடம்: ஆனைமலை ஆற்றுப்பாலம், பொள்ளாச்சி


Interludes.mp3

July 9, 2008

பூ பூத்த சோலை

பூஞ்சோலை பதிவில் கேட்ட பாடல் பூ பூ பூ பூ பூத்த சோலை

படம்: புது நெல்லு புது நாத்து

பல்லவி முழுவதும் 'பூ' விலே ஆரம்பிக்கும் வார்த்தைகளை சந்தத்துக்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார் பாடல் ஆசிரியர் கங்கை அமரன்.

பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம் பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

அனேகமாக இளையராஜாவும் பாரதிராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் இது தான் என்று நினைக்கிறேன் (இல்லை நாடோடித் தென்றலா?)
எதுக்கு ஆராய்ச்சி நாம அனுபவிப்போம் ,பாடல் கீழே

Poo Poo Poo - Pudh...

July 5, 2008

பூஞ்சோலை


இந்தப் பாடலும் கிராமியம் சார்ந்த பாடல் தான். தலைப்பில் இப்பாடலின் ஆரம்ப வரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. கேட்டு மகிழுங்கள்.

பதிவில் காணும் படம் எடுக்கப்பட்ட இடம்: நஞ்சேகவுண்டன்புதூர் , பொள்ளாச்சி







Interlude1.mp3Interlude2.mp3

மண்வாசனை - பாகம் 2

சென்ற பதிவில் நாம் கேட்ட இசைத்துளிகள் இடம் பெற்ற பாடல் ராசாவே உன்னை விட மாட்டேன். படம்: அரண்மனைக் கிளி.

ஜானகியின் அசத்தலான ஆரம்பத்துடன் புல்லாங்குழல் கை கோர்த்துக் கொண்டு ஒரு இனிமையான துவகதைத் தர, அங்கிருந்து ஏற்ற இறக்கங்கள் அற்ற வண்டிப் பாதையில் மாட்டு வண்டிப் பயணம் போல சீராகச் செல்கின்றது பாடல். பாடல் முழுவதும் வயல் வெளிகள், நீரோடைகள், பூந்தோட்டங்கள், பட்டாம்பூச்சி, ஆட்டுக்குட்டிகள் என்று கிராமிய மனம் கமழும். கதாநாயகியின் முக பாவங்களை மட்டும் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். ஒரு எளிமையான அமைதியான பாடலில் கூட, பாடலுக்கு இடையே வரும் இடைவெளிகளில் புல்லாங்குழலையும் வயலினையும் குழைத்து நரம்புகளில் சிலிர்ப்புகளை ஏற்படுத்துகிறார் ராஜா. வரப்பின் மீது நடந்து கொண்டே கைகளால் நெற்கதிர்களின் தலை கோதிக்கொண்டு செல்வது போல காட்சிகளை வருடிச் செல்கிறது அந்த இடைவெளி இசைத்துளிகள்.

ஊரு பக்கம் போயி ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கறவங்க எல்லாம் இந்த பாட்ட பாத்தா ஒரு சின்ன முன்னோட்டம் மாதிரி இருக்கும்.

யூடியூப் பதிவிற்காக நன்றிகள் பாலாஜி.

July 2, 2008

மண்வாசனை - பாகம் 1



மண்மணம் மாறாத பாடல்களைத் தந்தவர்களுள் என்னைப் பெரிதும் ஆக்கிரமித்து இருப்பவர் இளையராஜா தான். ராசையாவின் இசை பற்றிய கருத்துகளும், ஆய்வுகளும், பெருமைகளும் பல தளங்களில் விரவிக் கிடப்பதால் நாம் அது பற்றிய விவாதங்களில் ஈடு படாமல் ஓரிரு இசைக்கோர்வைகளைக் கேட்போம். எந்தப்பாடலின் நடுவே கீழ்காணும் துளிகள் வருகின்றன என்று தெரிகிறதா பாருங்கள். இந்தப்பாடலைப் பற்றி அடுத்த பதிவில்.

பதிவில் காணும் படம் எடுக்கப்பட்ட இடம்: அம்பராம்பாளையம், பொள்ளாச்சி
Interlude1.mp3Interlude2.mp3